எத்தியோப்பியாவில் பேருந்தில் சென்ற பயணிகளை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் துடி துடிக்க உயிரிழந்துள்ளனர்.
எத்தியோப்பியாவில் டைக்ரே மாகாணத்தில் உள்ள கிளர்ச்சி படையினருக்கும், அரசுப்படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இதில் இந்த மோதலில் டைக்ரே மாகாண படையினர் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். 

அதேவேளை அரசுப்படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதனால், உள்நாட்டு சண்டையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இப்படியிருக்க , அந்நாட்டின் பனிஷாங்குல் – குமுஸ் மாகாணத்தில் மிடகேல் பகுதியில் நேற்று இரவு ஒரு பஸ்சில் 35-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்திருந்தனர். 

அப்போது அந்த பஸ்சை இடைமறிந்த ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் பஸ்சில் இருந்த பயணிகளை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன பயணிகள் பஸ்சில் இருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். 

ஆனாலும், இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.