ஆஃப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான ராபர்ட் முகாபே (Zimbabwe's President Robert Mugabe - 93) கடந்த 37 ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் (15-11-2017) ஜிம்பாப்வேயில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.
தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தது. அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, முகாபேவுக்கும் ராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டனர். அப்போது ராணுவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் டஸ்வாங்கிரையும் முகாபே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். அதை தொடர்ந்து தற்போது முகாபேயுடன் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முகாபே பதவி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அடுத்த அதிபராகும் வாய்ப்பு எம்மர்சன் நங்காக் வாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிகாரம் பறிக்கப்பட்ட ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய மந்திரிகள், உயரதிகாரிகள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ராணுவ வட்டாரங்களை சுட்டிக்காட்டி ஜிம்பாப்வே அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.