தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி ஓய்வு பெற்றதையடுத்து, மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓராண்டுக்கும் மேலாக தமிழக பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசுத்தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித், பீகார் மாநில கவர்னராக சத்ய படேல், அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக பி.டி.மிஸ்ரா, அசாம் மாநில கவர்னராக ஜக்தீஸ் முஹி மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் முன்னதாக மேகாலயா மாநில கவர்னராக பணியாற்றி வந்தார்.

பன்வாரிலால் புரோஹித்: அரசியல் வாழ்க்கை:
கடந்த 1940-ம் ஆண்டு மராட்டியத்தின் விதர்பா பகுதியில் பிறந்த பன்வாரிலால் புரோஹித் முதன் முதலாக தனது அரசியல் வாழ்க்கையை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தொடங்கினார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திரா காங்கிரஸ் என கட்சி பிளவு பட்டபோது இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில் 1978-ல் நாக்பூர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, 1984 மற்றும் 1989 ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். பின்னர், காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த அவர் 1991-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1996-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பன்வாரிலால், 1999-ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

2003-ம் ஆண்டில் விதர்பா ராஜ்ய கட்சி என்று தனிக்கட்சி ஆரம்பித்த பன்வாரிலால் 2004 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, தீவிர அரசியலில் ஒதுங்கியிருந்த அவர் 2016-ம் ஆண்டில் மேகாலயா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

தற்போது, அவர் தமிழகத்தின் புதிய நிரந்தர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.